Category Archives: சுற்றுலா
தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணிப்பதே சுற்றுலா ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது “வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது”.
கேரளா சுற்றுப்பயணம்…!
கேரளா என்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர்.
01.நேஷனல் ஜாக்ரபிக்கின் ‘டிராவலர்’ பத்திரிக்கையில் ‘உலகின் பத்து அற்புதங்கள்’ , ‘வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்’ என தெரிவித்துள்ளார் .
02.கேரள மாநிலத்தில் உள்ள மாநகரமாகட்டும், சிறிய கிராமமாகட்டும் அது ‘கடவுளின் சொந்த நாடு’என்ற மணிமகுடத்தை சுமந்துகொண்டு மிடுக்குடன் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன.
03.கேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன.
04.கேரளாவின் மணற்பாங்கான கடற்கரைகளும், பேரின்பத்தை தரும் உப்பங்கழிகளும், இயற்கை எழிலால் போர்த்தப்பட்ட மலைவாசஸ்தலங்களும், பக்திமணம் கமழும் இடங்களும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டி அவர்களின் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத இன்பச் சுமையை சுமக்கச் செய்யும் பேரற்புதங்கள்.
05.வர்கலா, பேக்கல், கோவளம், மீன்குன்னு, செராய், பய்யம்பலம், ஷங்குமுகம், முழுப்பிலங்காடு உள்ளிட்ட கடற்கரைகள் கேரள பிரதேசத்தை இணையற்ற சுற்றுலா மையமாக திகழச் செய்து கொண்டிருக்கின்றன.
06.கேரளாவின் மயக்கும் உப்பங்கழிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆலப்புழா, குமரகம், திருவல்லம், காசர்கோட் போன்ற பகுதிகளில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் வாழ்வில் அதுவரை அனுபவவித்திடாத நொடிகளாகவே பேரின்பத்தை வாரி இறைத்து நகர்ந்து செல்லும்.
07.ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பாரம்பரிய ‘ஸ்நேக் போட் ரேஸ்’ அல்லது பாம்புப் படகுப் போட்டியில் உப்பங்கழிகளின் சலசலக்கும் நீரலைகளை கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளை மெய்சிலிர்க்க வேடிக்கை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எல்லையற்றது.
08.வேம்பநாடு ஏரி, அஷ்டமுடி ஏரி, பூக்கோட் ஏரி, சாஷ்டாம்கொட்டா ஏரி, வீரன்புழா வெள்ளயாணி ஏரி, பரவூர் காயல், மனச்சிரா போன்ற ஏரிகள் கேரளாவின் வளமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த உதாரணங்கள். இதில் வேம்பநாடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
09.வயநாடு மாவட்டத்துக்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்ற தேன் நிலவு ஸ்தலமாக மூணார் மலைப்பிரதேசம் அறிப்படுகிறது. மேலும் கேரளாவில் வாகமன், பொன்முடி, தேக்கடி, பீர்மேடு உள்ளிட்ட கண்கவர் மலைவாசஸ்தலங்கள் ஏராளம் நிறைந்து கிடக்கின்றன.
10.இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வேறுபட்ட ஒரு கலாச்சாரத்தை கேரள மாநிலம் கொண்டுள்ளது. இதன் பலவகைப்பட்ட கலைவடிவங்களும், உணவு வகைகளும், ஆடை ஆபரணங்களும் கேரள மாநிலத்தை மற்ற இந்திய பகுதிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக காட்சிப்படுத்தி கொண்டிருக்கின்றன.
11.கேரள மாநிலம் பல்வேறு நடன வடிவங்கள், நாடக வடிவங்கள், நாட்டுப்புறக் கலைகள் என்று கலைமகளின் இருப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இதில் குறிப்பாக கதக்களியும், மோகினியாட்டமும் உலகப்பிரசித்தம்.
12.புட்டு, இடியாப்பம், உன்னி அப்பம், பாலடை பிரதமன் (ஒரு வகை பாயசம்), நேந்திரம் பழ சிப்ஸ், மீன் உணவுகள், செவ்வரிசி போன்ற பதார்த்தங்கள் கேரளாவுக்கே உரித்தான உணவு வகைகள்.
13.கேரளாவில் ஹிந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்றும் முக்கிய மதங்களாக விளங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஹிந்துக் கடவுளான பகவதி அம்மனுக்கு கேரளா முழுக்க எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன.
14.குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலுக்கு உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோயிலை பற்றி சொல்லவே தேவையில்லை.
15.இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் சபரிமலை கோயிலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இவைதவிர திரிசூரில் உள்ள அயிராணிக்குளம் மஹாதேவா கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், திருவல்லா ஸ்ரீவல்லப கோயில் உள்ளிட்டவை கேரளாவின் பிற முக்கிய கோயில்களாக கருதப்படுகின்றன.
16.மலயாட்டூர் தேவாலயம், கொச்சி செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம், போர்ட் கொச்சியில் உள்ள சாண்டா குரூஸ் பெசிலிக்கா, கோட்டயத்தின் செயின்ட் மேரிஸ் போரன்ஸ் தேவாலயம் உள்ளிட்டவை கேரளாவின் பிராதன கிறிஸ்தவ தேவாலயங்களாக கருதப்படுகின்றன.
17.பழயங்காடி மசூதி, மடாயி மசூதி, சேரமான் ஜூம்மா மசூதி, கஞ்சிரமட்டம் மசூதி, மாலிக் தீனர் மசூதி போன்றவை கேரளாவின் முக்கிய இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களாகும்.
தமிழ்நாடு சுற்றுலா சிறப்பு பார்வை…!
தமிழ்நாட்டின் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கை அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. தமிழ்நாடு, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
தமிழ்நாட்டு மலை வாசஸ்தலங்கள்…!
தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலங்களில், முக்கியமாக உள்ள , ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பெருஞ்சிறப்பு பெற்ற தலங்களில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். நீலகிரியின் மலை வாசஸ்தலங்களான ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகியவை தங்களின் இயற்கை எழில் மற்றும் தேக ஆரோக்கியத்துக்கு உகந்த வானிலை ஆகியவற்றால், சுற்றுலாப் பயணிகளின் அளவில்லா கற்பனா சக்திக்கு உயிரூட்டக்கூடியனவாய் உள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, தமிழ்நாட்டின், புகழ்பெற்ற மற்றொரு மலை வாசஸ்தலமாகும். அவ்வளவாக யாரும் இதுவரை சென்றிராத கொல்லிமலை மற்றும் வால்பாறை ஆகியவையும் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாப் பயணிகளிடையே பரிச்சயமாகி வருகின்றன.
தமிழ்நாட்டு கடற்கரைகள்…!
தமிழகத்தின் கரையோர சுற்றுலாத்தலங்கள், கடற்கரை விடுமுறை என்றாலே, மஹாபலிபுரம் கடற்கரை நம் கண் முன்னே விரியும். மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை, தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருவோர்க்கு பயண விருந்தளிப்பனவாய் உள்ளன. மஹாபலிபுரம் மற்றும் சென்னை கடல் நீரின் விரிவாக்கமாக விளங்கும் கோவளம் கடற்கரை, அதற்குரிய அழகோடு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.
நாகப்பட்டின மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான சில கரையோர சுற்றுலாத்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கோடியக்கரை, வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் தரங்கம்பாடி ஆகியவற்றை, உள்ளடக்கியுள்ளது. நாகூர், வங்காள விரிகுடாவின் கரையோரத்தில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள, இனிய முரண்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய நகரமாகும். பூம்புஹார், ஒரு கடற்கரையோர தலமாக இருப்பதோடல்லாமல், வரலாற்றுச் சிறப்பு பெற்று, புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றதாகத் திகழ்கிறது. கன்னியாக்குமரி, இந்தியாவின் தெற்குக் கடைக்கோடியில், வங்காள விரிகுடா, அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை சங்கமமாகும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது. இதன் பூகோள அமைப்பு மற்றும் சுண்டி இழுக்கும் சுற்றுலா அம்சங்களினால், இது தமிழ்நாடு சுற்றுலாவின், அதீத மவுசு கொண்ட தலமாக விளங்குகிறது. திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை கடற்கரையோரம் அமைந்துள்ள சில முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய மையங்கள்…!
தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்கள், அவற்றின் வலிமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சார மணம் கமழும் தன்மைக்காகவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடையே பெரும் புகழ் பெற்றுள்ளன. இவ்வகை தலங்களில் முதன்மையானது, செட்டிநாடு பகுதியில், மிகப் பிரபலமாய் இருக்கும் காரைக்குடி ஆகும். இங்குள்ள சமையற்கலை, நெசவுகள், ஏராளமான கோயில்கள் மற்றும் சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள மாளிகைகள், ஆகியவை தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. கொங்கு கலாச்சாரம் தவழும் கோயம்புத்தூர், கோயில் நகரங்களான மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகியவையும் தமிழ் கலாச்சாரத்தின் உறைவிடங்களாக விளங்குகின்றன. இவை, இந்த நவீன யுகத்திலும், கலாச்சாரப் பெருமை பொதிந்து காணப்படுகின்றன.
தமிழ்நாட்டுக் கோயில்கள்…!
தமிழ்நாட்டின் கோயில்கள், தமிழ்நாடு சுற்றுலாவின், முத்திரை பதித்த மிக முக்கியமான தலங்களாகும். இங்குள்ள கோயில்களின் கோபுரங்கள் உயர்ந்தோங்கிய வண்ணம், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளும், அடுக்கடுக்கான சித்திர வேலைப்பாடுகள் மற்றும் வடிவங்களும் கொண்டவையாக மிளிர்கின்றன. தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகியவற்றின் தெய்வாம்சம் மற்றும் இவற்றை ஆண்ட அப்போதைய மன்னர்களால் நிறுவப்பட்டுள்ள கட்டிடக்கலை அற்புதங்களை பார்க்கவென்றே சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர். தாராசுரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமணஞ்சேரி, திருக்கருக்காவூர் ஆகியன கட்டாயமாக சென்று வரக் கூடிய சில முக்கிய கோயில்களாகும். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு உன்னதமானதோர் சான்றாக, அற்புதமான சிற்ப வடிவங்களை கொண்ட கோயிலாக, உயரிய கட்டிடக்கலை அதிசயமாக விளங்குகிறது. அலைகளற்ற அமைதியான கடற்கரையில் அமைந்துள்ள இராமேஸ்வரம் கோயில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றை கொண்டுள்ள சிறப்பு வாய்ந்ததாகும். தமிழ்நாட்டில், பாடற்பொருள் சார்ந்த கோயில்கள், ஆன்மீக சுற்றுலாக்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. தஞ்சாவூரை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்கள் (ஒன்பது கிரகங்கள்), ஒன்பது கிரகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். இக்கோயில்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆலங்குடி (வியாழன்), திருநள்ளாறு (சனி), கஞ்சனூர் (வெள்ளி), திருவேற்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (பாம்பு கிரகம்), கீழ்பெரும்பள்ளம் (பாம்பு கிரகம்), சூரியனார் கோயில் (சூரியக் கடவுள்), திங்களூர் (சந்திரன்) மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) ஆகியனவே அந்த ஒன்பது நவக்கிரக கோயில்களாம். பஞ்சபூதக் கோயில்கள் (ஐம்பூதங்கள்) – சிவபெருமான், ஐம்பூதங்களின் ஆதாரமாகவும், அவற்றின் திவ்ய தரிசனமாகவும் போற்றப்பட்டதால், இக்கோயில்கள், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன; காளஹஸ்தி மட்டும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. வீரம் மற்றும் விவேகம் நிரம்பியவராய் வர்ணிக்கப்படும், சுப்ரமண்யர் என்றும் அழைக்கப்படும் தமிழ்க் கடவுளான முருகனின், ஆறு போர் முகாம்களான பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருத்தணி மற்றும் சுவாமிமலை ஆகியவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தனிச்சிறப்புடன், கோயில்களுள் ஐம்பொன்னாய் ஜொலிக்கின்றன.
தமிழ்நாட்டின் நகரங்கள் :
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்கள், மாநிலத்தின் வெவ்வேறு ஊர்களுக்கும் செல்வதற்கான முக்கிய பயண தலங்களாக விளங்குகின்றன.